திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்கவேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் பேட்டி திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதில் தவறில்லை என்று அந்த பேட்டியில் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
இந்த கருத்து திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான டி.ரவிக்குமார், “காங்கிரஸ் கட்சித் தலைமையின் அனுமதியோடுதான் செல்வப்பெருந்தகை இந்த கருத்தை தெரிவித்தாரா என்பது பற்றி அக்கட்சியின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகையின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “2014-ஆம் ஆண்டுமுதல் பிரதமர் மோடியை ஆதரித்துவரும் பாமகவை காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் எப்படி சேர்க்க முடியும்? இத்தனை காலம் ராகுல் காந்தியை ஆதரித்து நம்மோடு இருக்கும் கூட்டணிக் கட்சிகளை ஏன் காயப்படுத்த வேண்டும்? இது கட்சியின் கருத்தல்ல… தனிப்பட்ட நபரின் கருத்து,” என்று கூறியுள்ளார். #standwithtruefriends என்ற ஹாஷ்டேக்கையும் அவர் ட்விட்டர் தளத்தில் உருவாக்கியுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபாலை டேக் செய்துள்ள விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், “மாநில அளவிலும், தேசிய அளவிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் நிலையாக இருந்துள்ளது. இந்த சூழலில் பாமகவை இந்த கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்ற செல்வப்பெருந்தகையின் கருத்து வருத்தம் அளிக்கிறது. பாஜக கூட்டணியை தங்களால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை திமுக தலைமையில் இல்லாதது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட கருத்து பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ரவிக்குமார் அளித்துள்ள பேட்டியில், “பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலரும் விசிகவில் அங்கம் வகிக்கிறார்கள். விசிகவில் 10 சதவீதத்துக்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்களும், 2 எம்எல்ஏக்களும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்று கூறியுள்ளார்.
இந்து ஆங்கில நாளிதழுக்கு ரவிக்குமார் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் ராமதாசையும், அன்புமணியையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை. பாஜகவுக்கு எதிராக ராமதாஸ் ஏதாவது பேசியிருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். விசிகவுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயபடுவதாக விசிக நிர்வாகி வன்னி அரசு தொலைக்காட்சி விவாதமொன்றில் விமர்சித்தார்.
ஆனால் பாமக ஒருவேளை இரண்டாகப் பிளவு பட்டால் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் சேர்க்கப்படும் வாய்ப்பிரிப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேரலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருப்பதை ஒட்டி இந்த கருத்து வலுப்பெறுகிறது. ஆனால் பாமக இரண்டாக உடையும் என்கிற வாய்ப்பு குறைவே. தந்தை மகன் இடையிலான விரிசல் விரைவில் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான அரசியல் விமர்சகர்களிடையே உள்ளது.
செல்வப்பெருந்தகையின் கருத்து, “இது கூட்டணியை பலவீனப்படுத்தும் கருத்து” என்று சொல்லப்பட்டாலும் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற குழப்பங்கள் வந்துதான் தெளிவாகும் என்பது வாடிக்கை.
ஸ்டாலின் முடிவு செய்வார்
”பா.ம.க. நிறுவனரை கூட்டணிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. ஆனால், இதை சில அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசி, விவாதப் பொருளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களுடான சந்திப்பின்போது, கூட்டணி குறித்து விவாதித்தது போன்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது போன்றும் ஒரு பிம்பத்தை எழுப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியல் களத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் நானும், வி.சி.க. தலைவர் திருமாவளவனும் அண்ணன், தம்பியாக பழகி வருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணியில் புதியதாக ஒரு கட்சியை இணைப்பது குறித்து கூட்டணியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் முடிவு செய்வார்,’’ இப்பிரச்னை குறித்து செல்வப்பெருந்தகை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.